பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தால் இதுதான் நடக்கும் – கண்ணீர் விட்ட அதிமுக எம்.எல்.ஏ!

Share this News:

சென்னை (13 மார்ச் 2021): பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்ததால் தான் இத்தனை பிரச்சனையும் என்று அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாகியுள்ளன. இதில் வாணியம்பாடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் விரக்தி அடைந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள கே.சி. வீரமணி பல்வேறு நெருக்கடிகளை தந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜெயந்தி, பார்த்திபன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீரமணி தொல்லையால்தான் வெளியேறி சென்றுவிட்டனர். எனக்கும் நிறைய தொந்தரவை அவர் தந்துள்ளார். இதுவரைக்கும் என் கட்சிக்காக, நான் ஒரு அமைச்சராக இருப்பதால் ஜெயலலிதாவுடைய மரியாதைக்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மரியாதைக்காகவும் நான் யாரிடமும் புகார் செய்ததே இல்லை.

மக்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறேன். எம்.பி. தேர்தலில் 24 ஆயிரம் வாக்குகள் வாணியம்பாடியில் கிடைக்கவில்லை என்று அமைச்சர் தரப்பில் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தால், முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்டத்தான் செய்வார்கள். பி.ஜே.பி. கூட்டணியிலிருந்தும் கூட அமைச்சராக நீடித்த பிறகு என்னுடைய சமுதாயத்தினர் என்னை என்னென்ன பேசினார்கள் என்பது எனக்குத்தான் தெரியும்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *