தோஹா (08 நவம்பர் 2025): கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு இடையே, பயணிகளுக்கான கடல் வழி போக்குவரத்து சேவை தொடங்கப் பட்டுள்ளது. இரு நாட்டு மக்களுக்கிடையே இச்செய்தி பரவலான வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
புதிய கடல் மார்க்க பயணத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி கத்தார் நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்ததாவது:
♥ கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயிலான சுமார் 65 கி.மீ தூரத்தைக் கடக்கும் இச்சேவை பயணிகளுக்கு மட்டுமேயானது.
♥ இது கத்தாரின் வடக்கில் உள்ள அல்-ருவைஸ் துறைமுகத்தையும் பஹ்ரைனின் சா’அதா மரினாவையும் இணைக்கிறது.
♥ இப்பயணத்திற்கான டிக்கெட்டுகளை MASAR செயலி மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
♥ முதல் கட்டமாக, இந்த சேவை GCC நாடுகளின் குடிமக்களுக்கு மட்டும் வழங்கப்படும். (இந்நேரம்.காம்)
♥ 2025 நவம்பர் 12 வரை, தினமும் இரண்டு முறை (காலை மற்றும் மாலை) இருவழி பயணங்கள் நடைபெறும்; நவம்பர் 22 வரை இது தினம் மூன்று பயணங்களாக அதிகரிக்கப்படும்.
♥ கப்பல்களில் சாதாரண வகுப்பு மற்றும் VIP இருக்கைகள் உள்ளன;
♥ ஒவ்வொரு பயணத்திலும் 28 முதல் 32 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
♥ தேவைக்கு ஏற்ப பயணிகள் மற்றும் பயணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
♥ இக் கடல் வழி போக்குவரத்து சேவை-யின் அனைத்து பயணங்களும், இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் சுங்க விதிமுறைகளுக்கு உட்பட்டவையாகும்.
- இந்நேரம்.காம்
