தோஹா, கத்தார் (10 செப் 2025): கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்திய சூழலில், இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) உடன் அலைபேசியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
கத்தார் நாட்டுடனான இந்தியாவின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு, ஹமாஸ் அமைப்பின் அலுவலகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிப்பதை வலியுறுத்தினார் பிரதமர் மோடி. – இந்நேரம்.காம்
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் நெறிகளை மீறி விட்டதாகவும், அனைத்து உலகச் சட்டங்களுக்கும், மரபுகளுக்கும் வெளிப்படையான மீறல் என்றும், கத்தார் மற்றும் பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக்கு இத்தகைய பயங்கரவாதம் கடுமையான அச்சுறுத்தலாகும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை மீறும் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. மோதலைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜாந்திர நடவடிக்கைகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாண இந்தியா ஆதரவளிக்கிறது. மேலும், கத்தார் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற எந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலையும் இந்தியா முற்றிலும் மறுக்கிறது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியப் பிரதமர் மோடிக்கு பதிலளித்த கத்தார் அமீர் அவர்கள், இஸ்ரேலின் கோழைத் தனமான இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் என்றும், கத்தார் தனது பாதுகாப்பைக் காக்கவும், நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என உறுதிப்படுத்தினார்.
மேலும், கத்தார் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் இந்தியாவின் நட்புறவு, சகோதர உணர்வு மற்றும் உறுதியான ஒற்றுமைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: வலுக்கும் உலகத் தலைவர்களின் கண்டனங்கள்
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த தீவிரவாதத் தாக்குதலை, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த தாக்குதல் முழுக்க முழுக்க நெதன்யாகுவின் முடிவால் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். எனினும், இதில் ட்ரம்ப் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், நட்புரீதியாக கத்தார் சென்றுள்ளார் அபுதாபியின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆயுதப்படை உச்சத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயித் அல் நஹ்யான்.
மேலும், துபாய் இளவரசர் ஷேக் முஹம்மத் பின் ஜயித் அல் நஹ்யான், கத்தாருக்கு பயணம் செய்துள்ளார்.
இத்துடன், ஜோர்தான் இளவரசர் அல் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் மற்றும் குவைத் மன்னர் ஸபா காலித் அல் ஹாமத் அல் ஸபா மேலும் பல நாடுகளின் தலைவர்கள் கத்தாருக்கு பயணித்து தம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். – இந்நேரம்.காம்
One thought on “கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: உலகத் தலைவர்களின் வலுக்கும் கண்டனங்கள்”