சிறையிலிருந்து சசிகலா பரபரப்பு கடிதம்!

Share this News:

சென்னை (20 அக் 2020): சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தங்களுடைய ‘06.10.20’ தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். விவரங்களை அறிந்து கொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

‘கோவிட்’ காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையை அளிக்கிறது. கோவிட் நோய்த் தொற்று பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் கோவிட் நோய்த் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு, சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன்.

கோவிட் காரணமாக ‘2020’ மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து ‘நேர்காணல்’களை கர்நாடக சிறைத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர்காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி, “சிறைத்துறை, எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என நான் நம்புகிறேன். உத்தரவு எனக்குக் கிடைத்தஉடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதன்படி ஃபைன் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில், ஃபைன் கட்டிய பிறகும், உச்சநீதிமன்றத்தில் ‘14.02.2017’ தேதிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக “குயுரிட்டி மனுவை” தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும். அது பற்றி டி.டி.வி. தினகரனிடம் ஆலோசித்துச் செயல்படவும்.

தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதளச் செய்தியைப் படித்துப் பார்த்தேன். எனக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமபொய் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.

அந்த இணையதளச் செய்தி ஊடகம், “ஜெய ஆனந்த் சமீபத்தில் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும் என் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனதாகவும், ‘அத்தை நீங்க பத்திரமா வெளியே வந்தாலே போதும், தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டுல, நீங்க இனி நல்லா ஒய்வு எடுக்கனும். உங்களை எல்லாரும் ரொம்ப புண்படுத்திட்டாங்க இனிமேல் வர்ற காலமாவது நீங்க நிம்மதியா இருக்கணும்’ – என என்னிடம் சொன்னதாக”, வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. ஜெய ஆனந்த் என்னைச் சந்திக்கவே இல்லை.

எதிர்காலத்தில் என் விஷயத்தில் அரசியல் குழப்பங்களை வேண்டுமென்றே ஏற்படுத்த எண்ணுபவர்கள், ஊடகங்கள் வாயிலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடும் பட்சத்தில், உரிய சட்ட விளக்கத்தினை என் சார்பாகத் தரவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை என் சார்பாக தாங்கள் எடுக்கவும் இக்கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெய் ஆனந்தும் சசிகலா போலவே தன்னைப் பற்றி வந்த செய்திகளை மறுத்திருக்கிறார். சசிகலா எழுதிய கடிதம் அதிமுகவினரிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *