குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்று முதல் தொடக்கம்!

Share this News:

புதுடெல்லி (03 ஜன 2022): நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று (3-ஆம் தேதி) நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காக பதிவு செய்வது புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. இதில் நேற்று இரவு 8 மணி வரை 6.35 லட்சம் பேர் கோவின் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அனுப்பி வைப்பார்கள். 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தனியாக மையங்களை அமைக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் 15 முதல் 18 வயது உடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று போரூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார். மாவட்டங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *