ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

Share this News:

வாரணாசி (12 செப் 2022): வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பில் அஞ்சுமன் இந்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி வைத்த வாதத்தில் “ ஞானவாபி மசூதி வக்புவாரியத்தின் சொத்து” எனத் தெரிவித்தனர். இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ், தரப்பில் “கோயிலை இடித்துவிட்டு, மசூதி கட்டப்பட்டதாகத்” தெரிவித்தார்

கடந்த 1669ம் ஆண்டு முகலாயர் ஆட்சியில் மன்னர் அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதியை இடித்தார். அந்தபகுதியில்தான் ஞானவாபி மசூதியை எழுப்பினார். ஆதலால், ஞானவாபி மசூதியை ஆக்கிரமிக்கவும், நுழையவும் முஸ்லிம்களுக்க எந்த உரிமையும் இல்லை என இந்துக்கள் தரப்பில் வாதிடப்பட்டது

ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் கூறுகையில் ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்த இந்துக் கோயிலும் இல்லை, தொடக்கத்தில் இருந்தே மசூதி இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும், சிவில் நீதிமன்றத்தில் இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவையும் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த மே 20ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மாவட்ட நீதிமன்றம் வழக்கினை விசாரித்து முடித்து தீர்ப்பை கடந்த மாதம் ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இன்றைய தீர்ப்பையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. வாரணாசி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *