இந்தியாவில் அதிகரிக்கும் புற்று நோய் – ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சித் தகவல்!

Share this News:

புதுடெல்லி (19 ஆக 2020): இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 10 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுளாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் மற்றும் நோய்கள் தொடர்பான தகவல் திரட்டும் தேசிய மையம் இணைந்து நடத்திய ஆய்வில் 2020ம் ஆண்டில் 13.9 லட்சம் நபர்கள் புற்றுநோய் தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும் இது 2025ம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது, 1.30 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதன் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. 2012 – 2016ம் ஆண்டில் திரட்டப்பட்ட தகவலில் புற்றுநோய் பாதிப்புகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், இந்த சூழலில் வரும் ஆண்டுகளிலும் மேலும் நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களை பொறுத்தவரை, வாய், நுரையீரல் மற்றும் வயிற்று புற்று நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாகவும், பெண்களை பொறுத்தவரை மார்பக புற்றுநோய் அதிகம் தாக்குவதாகவும் ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ள ஐ.எம்.சி.ஆர், புற்று நோய் இருப்பது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஆண்களும், ஏழு லட்சத்திற்கும் அதிகமான பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *