ரியாத் (13 ஜூன் 2021): முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இவ்வருடம் ,60,000 யாத்ரீகர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது. இந்த புனித பயணத்துக்கான அறிவிப்பை சவுதி அரேபிய அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி இந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும், கொரோனா தடுப்பூசி பெற்ற 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஹஜ் புனித பயணம் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் வசிக்கும் மிகக்குறைந்த அளவிலான யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.