பஹ்ரைன் (19 பிப் 2021): புதிய மாறுபட்ட கொரோனா பரவலை தொடர்ந்து பஹ்ரைனில் கோவிட் விதிமுறைகளை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உணவகங்களுக்குள் உணவு பரிமாறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. உட்புற உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்படும். விளையாட்டு பயிற்சி 30 பேருக்கு மேல் செய்ய முடியாது. வீடுகள் மற்றும் தனியார் இடங்களில் 30 க்கும் மேற்பட்டவர்களின் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
உட்புற விளையாட்டு வகுப்புகளும் நிறுத்தப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்பு இருக்காது. ஆன்லைன் படிப்பு வழக்கம் போல் தொடரும். அரசு அலுவலகங்களில் 70 சதவீதம் ஊழியர்கள் வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிட் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு தேசிய மருத்துவ குழு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே தளர்வில் இருந்த இந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 7 முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. பிப்ரவரி 21 வரை அறிவிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் இப்போது மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.