தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு!

Share this News:

சென்னை (30 ஜன 2021): வருகிற 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்களில் மருத்துவர்கள், செவிலியர்களில் 6 லட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 1 லட்சம் பேர்தான் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

எனவே தடுப்பூசி போடப்படுவதை அதிகரிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் முன் கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசும் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் செய்யப்பட்டு வருகின்றன.

முன்கள பணியாளர்களில் சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கும் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அந்த வகையில் போலீசார், வருவாய்த்துறை, பத்திரிகை துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இதுதொடர்பாக தற்போது மற்றத்துறை முன்கள பணியாளர்கள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை மற்ற துறையை சேர்ந்த 3.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 1.20 லட்சம் பேர் போலீஸ் துறையை சேர்ந்தவர்கள். 1.20 லட்சம் பேர் வருவாய் துறையை சேர்ந்தவர்கள்.

சுமார் 1 லட்சம் பேர் மற்ற பிரிவுகளில் இடம்பெற்று உள்ளனர்.

மூத்த குடிமக்களுக்கும் வருகிற 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மூத்த குடிமக்களும் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே தடுப்பூசிகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த தடுப்பூசிகள் உரிய நேரத்தில் உரியவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதே முக்கியமாகும்.

தடுப்பூசிகளை பொறுத்தவரை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட இயலாததால் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தனியார் மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

150-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். பின்னர் மற்ற துறையை சேர்ந்தவர்களும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களும் இலவசமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது எந்த வகையிலும் கட்டாயம் அல்ல. அவரவர் விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்ளலாம். இதன் காரணமாகத்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட சற்று குறைவாக உள்ளது.

பிறதுறை முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும். ஒவ்வொரு துறையினருக்கும் முன்பதிவு செய்வது எப்படி என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *