கொல்கத்தா (08 ஜூன் 2021): “கோவிட் தடுப்பூசியை பிரதமர் மோடி இலவசமாக கொடுக்காததால் பலரது உயிர் பறி போனது” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவித்திருந்தார்.
பிரதமரின் அறிவிப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி’ “அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பிப்ரவரி மாதம் முதல் பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் 4 மாதங்களாக செய்யப்படவில்லை.
மிகுந்த அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் பேச்சை கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அமல்படுத்த பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். கோவிட் தொற்று பரவியது முதலே மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கெனவே பலரது உயிரை வாங்கிவிட்டது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என்று மம்தா தெரிவித்துள்ளார். .