இவ்வருடம் எப்படி?- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Share this News:

சென்னை (29 செப் 2020): இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின்(LA-NINA, IOD) அடிப்படையில் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் (செப்டம்பார் 30) வட கடலோர மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகர் (கடலூர் ), சிதம்பரம் தலா 13, கொள்ளிடம் (நாகப்பட்டினம்) 11, கொத்தவச்சேரி (கடலூர்), 9, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஏத்தாப்பூர் (சேலம்) தலா 8, வானமாதேவி (கடலூர்), தொழுதூர்(கடலூர்), கங்காவல்லி (சேலம்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி ), தழுத்தலை (பெரம்பலூர் ) தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *