குடியுரிமைச் சட்ட திருத்தம் குறித்து கபில் சிபல் அதிர்ச்சித் தகவல்!

Share this News:

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அமுல்படுத்த முடியாதவாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கேரளாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கபில் சிபல் “சிஏஏ நிறைவேற்றப் பட்டுவிட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீங்கள் அதை எதிர்க்கலாம், சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் மற்றும் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதை நான் அமல்படுத்தமாட்டேன் என்று கூறுவது சிக்கலையும், கூடுதல் சிரமங்களையுமே ஏற்படுத்தும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்பற்ற மாட்டேன் என ஒரு மாநில அரசு கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மிகவும் கடினமாகும்” என்றார்.

சிஏஏவை எதிர்த்து கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் சிஏஏ மட்டுமல்லாது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *