குடியுரிமை திருத்தச் சட்டம்: நேருக்கு நேர் விவாதிக்க தயார் – அமித்ஷாவுக்கு உவைசி சவால்!

Share this News:

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க நானும் தயாராக உள்ளேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸை சாடிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. குடியுரிமை சட்டத்தில் யாருடைய குடியுரிமையாவது பறிக்கும் ஒரு அம்சத்தையாவது காட்ட முடியுமா என ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன்” என்றார்.

இதனை தொடர்ந்து அமித் ஷாவின் சவாலை ஏற்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் தெரிவித்திருந்தார்.

கபில் சிபலை தொடர்ந்து ஐதராபாத் எம்பியும் AIMIM தலைவருமான அசாதுத்தீன் உவைசியும் அமித் ஷாவின் சவாலை ஏற்பதாகவும் விவாதத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டியும் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *