வெளிநாட்டில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிப்பு உண்டா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Share this News:

புதுடெல்லி (02 பிப் 2020): “வெளிநாட்டில் வருமானம் ஈட்டி, அதன் மூலம் இந்தியாவில் சொத்துக்கள் வாங்கியிருந்தால் வரி விதிக்கப்படும்!” என்று புதிய விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் வருமானம் மற்றும் சொந்தமாக தொழில் நடத்தி அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானம் மீதான வரிவிதிப்பு தொடர்பாக தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை!” என்ற சர்ச்சை எழுந்தது.

சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் முக்கிய ஊடகங்களும் “வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வருமானத்திற்கும் வரிவிதிப்பு உண்டு!” என்றே செய்திகளை வெளியிட்டு இருந்தன.

இது வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மத்தியில் பெரும் குழப்பத்தையும் கோபத்தையும் உண்டாக்கி இருந்தது.

குழப்பம் அதிகரித்த இச் சூழலில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை!” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ஆனால், “வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில், சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கினாலும் அதன்மூலம் வருமானம் கிடைத்தாலும், அதற்கு மட்டுமே வரி விதிக்கப்படும்!” என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த புதிய விளக்கத்தினால், குழப்பம் இன்னும் அதிகரித்துள்ளது என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *