மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!

Share this News:

திருவனந்தபுரம் (31 டிச 2020): மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வை கூட்ட கடந்த 23ம் தேதி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை மறுத்துவிட்டார்.

ஆளுநர் ஆரிப் முகமது கான் செயலுக்கு ஆளும் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. பின்னர் 2-வது முறையாக கேரள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

அதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்டப்பேரவையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், “ புதிய வேளாண் சட்டங்களால் கேரளாவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த போராட்டம் தொடர்ந்தால் அது கேரளாவை கடுமையாக பாதிக்கும் என்பதை தற்போதைய நிலைமை தெளிவுபடுத்துகிறது. பிற மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டால் கேரளா பட்டினி கிடக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று பினராயி விஜயன் கூறினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *