சிறுபான்மை வாக்குகளை இழந்ததால் தோல்வி – பாஜக மீது அதிமுக சரமாரி குற்றச்சாட்டு!

Share this News:

சென்னை (07 ஜூலை 2021): “பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதிமுக மீது பாஜகவும் கடும் விமர்சனம் வைத்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக ஆட்சி வர வேண்டும் என்றுதான் மக்கள் நினைத்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை, இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தோம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மை வாக்குகளை முழுமையாக எடுத்திருக்கலாம்” என காட்டமாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ”அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜக தோல்வியடைந்தது” என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இப்படி மாறி மாறி குற்றம் சுமத்தி வருவதால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *