சென்னை (22 ஜூலை 2020): கந்தசஷ்டி கவசம் மற்றும் கறுப்பர் கூட்டம் யூடுப் சேனல் குறித்து நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என ட்விட்டரில் திடீர் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், கருப்பர் கூட்டத்தின் வீடியோவை டெலிட் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவிற்கு இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வேளச்சேரி செந்தில்வாசன்(49), நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூடூப் சேனல் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… எல்லா மதமும் சம்மதமே!! கந்தனுக்கு அரோகரா!!” என குறிப்பிட்டுள்ளார்.
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020