சென்னை (01 அக் 2021):: மத துவேஷத்தை தூண்டும் ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போவதாகவும், முடிந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர, ருத்ரதாண்டவம் படமானது கிறிஸ்துவ மக்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மக்களுக்கு ஜபம் என்பது புனிதமானது. ஆனால் இயக்குனர்கள் மத கலவரத்தையும் ,பிரச்சினையும் உருவாக்குவது போன்ற திரைப்படங்களை உருவாக்குகிறார்கள்.
திரைப்படங்களில் கிருஸ்துவ மக்கள் குறித்து இழிவாக பேசப்படுகிறது. கிறிஸ்தவ மக்களுக்கு பெரிய கஷ்டங்களை தருகிறது. மேலும் மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களை வெளியிடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போகிறோம். வேண்டும் என்றால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயராக உள்ளோம். இனி வரும் நாட்களில் சமுதாயத்திற்கும், வாலிபர்களுக்கும் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் உள்ளிட்ட நோக்கங்களை கொண்ட படங்களை எடுக்க வேண்டும்.
ருத்ர தாண்டவம் போன்ற மத கலவரத்தை தூண்டும் திரைப்படங்களை பார்ப்பதால் அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாகும் ஏற்படுகிறது.