ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

Share this News:

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

மேல்முறையீடுகளை நிராகரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாபைத் தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார், அதே நேரத்தில் நீதிபதி சுதாம்சு துலியா ஹிஜாப் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சில மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, தலைமை நீதிபதி டி.ஒய் தலைமையிலான அமர்வு முன் கொண்டு வந்தார்.

பிப்ரவரி மாதம் மாணவர்களுக்கு நடைமுறைத் தேர்வு நடந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவில் விசாரித்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கினால், மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் மீனாட்சி அரோரா தெரிவித்தார்.

இதனை ஏற்ற தலைமை நீதிபதி ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாட்டின் மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புவோர், அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அரசின் அநீதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *