புதுடெல்லி (29 ஜூன் 2021): பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மத்திய பெட்ரோல் அமைச்சர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக கடும் உயர்வில் உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே நாட்டில் பெட்ரோல் விலை உயர்வதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் வரிகளே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஷ்மி என்பவர் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் விலை குறைவாக உள்ள போதிலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப் படுவதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தமன்னா ஹாஷ்மி முன்னதாக பதஞ்சலி விளம்பரங்கள் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.