அம்பானி வீட்டை முற்றுகையிட விவசாயிகள் முடிவு!

Share this News:

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, அம்பானி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த சட்டங்கள் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.

இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் உள்ள தொழில் அதிபர் அம்பானியின் கார்பரேட் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பான சுவாபிமானி சேத்காரி சங்கட்னா தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜூ ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் அம்பானி மற்றும் அதானி போன்ற முதலாளிகளுக்கு பயனளிப்பதற்காக கொண்டுவரப்பட்டு உள்ளன. அதானி, அம்பானியின் நன்மைக்காக விவசாயிகளை அடிமையாக்குவதே மத்திய அரசின் நோக்கம். இந்த நோக்கத்தை நாங்கள் அறவே எதிர்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் நடைபெற அனுமதிக்க மாட்டோம்.

வரும் 22-ந் தேதி மும்பையில் உள்ள அம்பானியின் கார்பரேட் வீட்டின் முன்பு இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலையிட்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டங்களையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.” என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *