புதுடெல்லி (11 நவ 2020): அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு கட்டிடக் கலைஞர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் அலிபாக்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். மரணத்திற்கான காரணம் தற்கொலை என்பதாக கூறப்பட்டது.
அன்வாய் ஆங்கிலத்தில் எழுதிய தற்கொலைக் குறிப்பில் , அன்வாய்க்கு மூன்று நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய பணம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருந்தார்.. தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாபின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட அர்னாப் அலிபாக்கில் ஒரு தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு மொபைல் போன் பயன்படுத்தியதைத் தொடர்ந்து நவி மும்பையில் உள்ள தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார். அர்னாப் எங்கிருந்து தொலைபேசி பெற்றார்? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே அவரது ஜாமீன் மீதான மனு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து ஜாமீன் கோரி அர்னாப் உச்ச நிதிமன்றத்தில் மனு அளித்தார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை அடுத்து சிறையிலிருந்து அர்னாப் விடுதலை செய்யப்பட்டார்.