சென்னை (28 மார்ச் 2021): ‘ஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி, நான் பேசியதை வேண்டுமென்றே சிலர் விரசமாக சித்தரித்து பரப்பி வருகின்றனர். என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
பெரம்பலூரில் பத்தரிக்கையாளர்கள் மத்தியில் கூறியதாவது:
“ஸ்டாலின், கட்சியில் படிப்படியாக வளர்ந்து, தலைவராக வந்தார். அதனால் அவர் பரிணாம வளர்ச்சி பெற்ற முழுமையான குழந்தை என்று சொன்னேன்.ஆனால், இ.பி.எஸ்., நேர்வழியில், மக்கள் தீர்ப்பால் முதல்வராக வரவில்லை. வேறு விதமாக, சசிகலாவின் காலைத்தொட்டு, குறுக்கு வழியில் வந்தார்.
அதனால் அவரை அப்படி வர்ணித்தேன். அதைப்போய் நான் ஏதோ முதல்வரை அவதுாறாக பேசி விட்டேன், என்று சித்தரிக்கப்படுகிறது. ஒரு கட்சியில் பெரிய பதவியில் இருப்பவன் நான். மத்திய அமைச்சராக இருந்தவன். முதல்வரை அவதுாறாக பேசவோ அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கவோ எந்த எண்ணமும் கிடையாது.
ஒரு குழந்தை ஆரோக்கியமானது, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்றது என்ற பொருளில் பேசினேன். ஆகவே, அந்த செய்தியை, யாரும் நம்ப வேண்டாம்.தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., புகார் கொடுத்தால், சட்டப்படி சந்திப்பேன்.” என்று ராசா தெரிவித்தார்.