இடஒதுக்கீடு விவகாரம் – ஆ.ராசா நாடாளுமன்றத்தில் சரமாரி கேள்வி!

Share this News:

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.பி., ஆ.ராசா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய அவர், “பா.ஜ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடு கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க உறுப்பினர்களின் கூச்சலைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “உங்கள் அரசாங்கம் என்று நான் மத்திய அரசைச் சொல்லவில்லை. உத்தரகாண்டில் ஆளும் பா.ஜ.க அரசைக் குறிப்பிடுகிறேன். உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்றில், ‘எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையும் கிடையாது, சட்ட சாசன உரிமையும் கிடையாது’ என்ற வாதத்தை வைத்துள்ளது உத்தரகாண்ட் அரசு. இது இட ஒதுக்கீடுக்கு எதிரான நடவடிக்கை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “இதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது பிறப்புரிமை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உத்தரகாண்ட் பா.ஜ.க அரசின் வாதம் அமைந்துள்ளது.

இந்த நிலையைப் போக்க புதிய சட்ட நடைமுறையை அமல் செய்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களின் உரிமையை மீட்கவேண்டும்” என ஆ.ராசா பேசினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *