அரியலூர் (09 செப் 2020): நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாணவர் விக்னேஷ் (19) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகாமை நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கனவை சீர்குலைக்கும் இந்த சிபிஎஸ்சி சிலபஸை கொண்ட தேர்வினை நடத்தகூடாதென தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இருப்பினும், தேசிய தேர்வு முகாமை நீட் தேர்வை நடத்துவதில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதி அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகனான விக்னேஷ் (19) 12 ஆம் வகுப்பை முடித்து விட்டு நீட் தேர்வுக்காக தயராகி வந்துள்ளார். நீட் தேர்வு பதற்றத்தால் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள செந்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் கோவையில் சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வினால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.