தஞ்சாவூர் (19 மார்ஷ் 2021): முதல்வர் எடப்பாடி ஒரு போலி விவசாயி அவர் விவசாயி கிடையாது விஷ வாயு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக கூறும் முதல்வர் பழனிசாமியின் நாக்கு அழுகிபோகும். காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து 50 ஆண்டுகள் காப்பாற்றியவர் கருணாநிதி. அந்த உரிமையை மத்திய அரசின் ஜல்சக்தி துறையிடம் அடமானம் வைத்திருக்கும் துரோகி தான் இந்த பழனிசாமி.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க போராடி அது அமைத்தவர், காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தவர், காவிரி இறுதி தீர்ப்பை பெற்றுத்தந்தவரும் கருணாநிதி தான். அதேபோல் ஒரு விவசாயி ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை எனவும் பழனிசாமி பேசிவருகிறார். எனக்கு விவசாயியை பிடிக்கும், பச்சை துண்டை போர்த்திக்கொண்டு பச்சை துரோகம் செய்யும் போலி விவசாயியை பிடிக்காது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் என கொச்சைப்படுத்தியுள்ளார். நீங்கள் விவசாயி அல்ல விஷவாயு. இதற்கெல்லாம் முடிவுக்கட்ட தான் இந்த தேர்தல். திமுக.,வின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து அதிமுக அறிவிக்கிறது. கூட்டப்பகுதியில் மக்கள் அனைவரும் தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் அண்ணனாக கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.