சென்னை (05 ஆக 2020): கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உயிரிழந்தார்.
பானுமதிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பானுமதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பானுமதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருமாவளவனிற்கு 2 அக்காக்கள். ஒருவர் பிறந்தபோதே உயிரிழந்து விட்டதாக திருமாவளவன் கூறியுள்ளார். மற்றொருவர் மூத்த அக்கா, கொரோனாவால் உயிரிழந்த பானுமதி.
தமிழ்நாட்டில்கொரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.