சென்னை (05 ஆக 2020): நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் எஸ்.வி.சேகரின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தெரிவித்ததாவது:
”மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா தான் இவரை அடையாளம் காட்டினார். அந்த தொகுதியில் இவர் எந்தக் கொடியை காட்டி ஓட்டு வாங்கினார்? அதிமுக கொடி, அண்ணா பெயரை சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து வருட எம்.எல்.ஏ சம்பளத்தை திரும்ப கொடுத்துவிட வேண்டும்!”
“எஸ்.வி.சேகர் உண்மையிலேயே மானம், ரோஷம் உள்ளவர் எனில், அதிமுக கொடியை காட்டித்தான் நான் ஓட்டுக்களைப் பெற்றேன். எனவே, இந்த சம்பளம் எனக்கு தேவையில்லை என்று அரசிடம் திரும்ப கொடுத்திட வேண்டும். இரண்டாவது, அதிமுக தயவில் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்ஷன் பணம் வருகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்ஷன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள்”.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.