தோல்வியை கொண்டாடி ஆச்சர்யப்படுத்திய திமுக பிரமுகர்!

Share this News:

பரங்கிப்பேட்டை (04 பிப் 2020): தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தோல்வியை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் திமுக பிரமுகர்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முத்துபெருமாள் தோல்வி அடைந்தார். இதில் துவண்டு விடாத முத்துபெருமாள், மறுநாளே கிராமங்களுக்கு சென்று தனக்கு வாக்களி்த்த வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். அதுமட்டுமின்றி உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் நேற்று முன்தினம் ஊர் விருந்து என்ற பெயரில் கிராம மக்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டனர். அப்போது முத்துபெருமாள், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

இது குறித்து முத்துபெருமாள் கூறுகையில், தோல்வி அடைந்தாலும் எனக்கு வாக்களித்தவர்களை நினைத்துப் பரக்கும் வகையில் இந்த விருந்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார். .


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *