டெல்லி ஷஹீன் பாக்கிலிருந்து களத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை – போராட்டக் காரர்கள் திட்டவட்டம்!

shaheen-bagh shaheen-bagh
Share this News:

புதுடெல்லி (20 பிப் 2020): ஷஹீன் பாக்கிலிருந்து வேறு இடத்திற்கு போராட்டக்களத்தை மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை என்று குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை.

இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள். எனவே இப்போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. அதேவேளை பொதுமக்களுக்கோ, சாலை போக்குவரத்திற்கோ போராட்டக் காரர்கள் இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்த வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் போராட்டக் களத்தை மாற்றவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து போராட்டக்காரர்களிடம் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் மற்றும் வஜஹத் ஹபீபுல்லா ஆகியோர் சென்றனர். ஆனால் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனவே வியாழக்கிழமையும் பேச்சுவார்த்தை தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே போராட்டத்தில் ஆரம்பம் முதல் பங்கேற்றுள்ள மூதாட்டிகள் ஆசிமா காத்தூன் மற்றும் பல்கீஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இட மாற்றம் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *