தேசிய சைக்கிள் சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்க நாக்பூர் சென்ற வீராங்கனை நிடா பாத்திமா திடீர் மரணம்!

Share this News:

நாக்பூர் (24 டிச 2022): தேசிய போலோ சைக்கிள் சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்த கேரள அணி வீராங்கனை பத்து வயது நிடா பாத்திமா திடீரென உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிடா பாத்திமா அருந்திய உணவு விஷமாக மாறியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் நிடா பாத்திமாவின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம் எழுதியுள்ளார்.

நிடா பாத்திமாவுக்கு சிறந்த மருத்துவச் சேவை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் விசாரணை எல்லைக்குள் சேர்க்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணைக்கு கேரள அரசு தரப்பில் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நிடா பாத்திமாவின் உடல் நெடும்பாசேரி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தந்தை ஷிஹாபுதீன் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். உடலை மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

நிதாவின் உடல் முதலில் நிதா படித்த நீர்குன்னம் பள்ளியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும். அம்பலப்புழா காக்காம் ஜும்ஆ மஸ்ஜிதில் நல்லடக்கம் செய்யப்படும்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. நிடாவின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக மூன்று ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *