புதுடெல்லி (19 ஜூன் 2021): கோவிட் 19, 3வது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது துவங்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் 19 இரண்டாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் 3வது அலை தவிர்க்க முடியாதது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கோவிட் பரவலில் கடந்த முதல் மற்றும் இரண்டாவது அலையில் ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் நாம் பாடம் கற்று கொண்டது போல் தெரியவில்லை. மீண்டும் கூட்டங்கள் கூடுகிறது. மக்கள் ஒரே இடத்தில் சேர்கின்றனர். இதனால், அடுத்த சில நாட்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரிக்கக்கூடும். இதனால் 3வது அலை நமது நாட்டில் தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் 3வது அலை துவங்கும். இன்னும் சிறிது நாட்கள் கூட ஆகலாம். ஆனால் இதனை தவிர்க்க நாம் எப்படி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதை பொறுத்தது.
எனவே கோவிட் நடைமுறைகளை தாண்டி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடாவிட்டால், நாம் எளிதில் பாதிக்கப்படுவோம். வைரஸ் தொடர்ந்து உருமாறுவதால், நாம் கவனமுடன் இருக்க வேண்டும். என்று அவர் கூறினார்.