புதுடெல்லி (14 ஜூலை 2020): இராமன் பிறந்த உண்மையான அயோத்தி, நேபாளத்தில் உள்ளது என்று நேபாள பிரதமர் ஒளி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்தியா-வின் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்குத் தடை விதித்த பின்னர் நேபாள பிரதமர் அதிரடியாக ஒரு விஷயத்தை போட்டுடைத்திருக்கின்றார்.
எந்த இராமனை முன் வைத்து சங்க அமைப்புக்கள் ஆட்சிக் கட்டில் ஏறினவோ, அந்த இராமன் இந்தியாவுக்கு உரியவன் அல்ல, அவனுடைய பிறப்பிடம் நேபாளம் என்று அதிரடிக் கருத்தைத் தெரிவித்து சங்க அமைப்புக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றார்.
இராமனுடைய பிறப்பு குறித்த ஆதாரங்களின் உண்மையில் ஏற்படுத்தப்பட்ட திரிபுகள், அவனுடைய பிறப்பிடமாக இந்திய அயோத்யா-வைக் காட்ட ஆரம்பித்தன என்று தனது இல்லத்தில் நடந்த பானு ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது அவர் தெரிவித்த இந்த கருத்தை நேபாள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
நேபாளத்தின் பால்மீகி ஆசிரமம்,மேற்கு பிர்குன்ஜ், தோரி-யில் அமைந்திருப்பதுதான் உண்மையான அயோத்தியா என்று வாதிட்ட நேபாள பிரதமர், தனது இந்த கருத்துக்கு அறிஞர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை தான், அறிந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
கடந்த மே 8-ஆம் தேதி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், கைலாஷ் மான்சரோவர் யாத்திரிகர்களுக்கு வசதியாக, 17,000 அடி உயரத்திலிருந்து உத்தர்கண்ட்-இல் அமைந்த தார்சாலா சீன எல்லைப் பகுதியுடன் இணைக்கும் 80 கி.மீ. நீள லிபுலேக் புறவழிச் சாலையை, திறந்து வைத்ததிலிருந்து இந்திய-நேபாள உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது குறிப்பிடத்ததக்கது.