புதுடெல்லி (24 பிப் 2021): புதுச்சேரி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று முன் தினம் புதுச்சேரி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.