புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தியையொட்டி கலவரம் வெடித்ததாகக் கூறப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க என்டிஎம்சி இடிப்பு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதனை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, கபில் சிபல், பி.வி.சுரேந்திரநாத் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற பார்வைக்குக் கொண்டு சென்றனர். இதன் பேரில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் இடிப்பு நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது, யாருக்கும் இதுகுறித்து நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்று துஷ்யந்த் தவே நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். இதனை அடுத்து இந்த விவகாரம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி கூறினார்.