புதுடெல்லி (20 ஆக 2021): 3 டோஸ் கொண்ட சைகோவ்- டி கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனாவை தடுக்கும் வகையில் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடுக்கி விட்டுள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது
தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் 5வது தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜைடஸ் காடில்லா என்ற நிறுவனம் வடிவமைத்த சைகோவ் டி தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அங்கீகாரம் பெறும் உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியாகும்.
3 டோஸ் கொண்ட சைகோவ்- டி தடுப்பூசிக்கு மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அகமதாபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனம் ஜூலை 1 ஆம் தேதி தனது சைகோவ்- டி தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்தது. இந்த தடுப்பூசி 66.6 சதவீதம் செயல் திறன் கொண்டதாகும்.