புதுச்சேரி (22 பிப் 2021): புதுவை சட்டசபையில் காங்கிரஸ்- திமுக தலைமையிலான அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.
புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு இன்று (பிப்.,22) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து அவர் தனது பெரும்பான்மையை இன்றைய தினம் நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமி அரசுக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை சட்டசபை கூடியது. இதில் தனது ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். கைகளை உயர்த்துவதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறினர். தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க சென்றார் நாராயணசாமி.