திமுக காங்கிரஸ் இடையே விரிசல் – டெல்லியில் பிரதிபலிப்பு!

Share this News:

சென்னை (14 ஜன 2020): திமுக மீது குற்றம் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுக தலைமை ரொம்பவே அப்செட்டாக உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்தது.

இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் திமுக கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் கே.எஸ் அழகிரியின் அறிக்கையே என்று பலரும் யூகித்தனர்.

அதனை உறுதி செய்துள்ளார் திமுக எம்பி டி.ஆர்.பாலு. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் திமுகவையும் காங்கிரஸையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ப.சிதம்பரம் இறங்கியுள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் விசிகவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *