லக்னோ (31 டிச 2020): உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், 14வயது மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பில் இரு மாணவர்களுக்கு இடையே யார் பிடித்த இடத்தில் உட்காருவது தொடர்பாக நேற்று பிரச்சினை எழுந்தது. இதில் கோபமடைந்த ஒரு மாணவன், வீட்டிலிருந்து துப்பாக்கியை கொண்டுவந்து தன்னுடன் சண்டையிட்ட சக மாணவனை வகுப்பறையில் சுட்டுக் கொன்றுள்ளார்.
இதுகுறித்த விசாரணையில் இரு மாணவர்களும் நேற்று சண்டை போட்டுள்ளனர். அதில் ஒரு மாணவன், ராணுவத்தில் வேலை செய்யும் அவரது மாமாவின் வீட்டிற்குச் சென்று அவரின் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான். பின், இன்று காலை அவனுடன் சண்டையிட்ட சக மாணவனை மூன்று முறை சரமாறியாக சுட்டுள்ளான். இதில், சுடப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சுட்ட மாணவனை கைது செய்து, அவனின் பையை சோதனை செய்ததில் மற்றொரு நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அந்த மாணவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.