கொல்கத்தா (20 மார்ச் 2021): மேற்குவங்கத்தில் புதிதாக பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு அக்கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3-ம் முறையாக ஆட்சியை கைப்பற்ற செல்வி மம்தாவும், மம்தாவின் அரசை அகற்ற பா.ஜ.க.-வினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில், திரிணாமூல் காங்கிரசிலிருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா சீட் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியின் தேர்தல் அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மால்டா பகுதியில் உள்ள பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தை பாஜகவினர் அடித்து நொறுக்கியதுடன், கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். மேற்குவங்கத்தில் தொண்டர்களிடையே எழுந்துள்ள பிரச்சனையை சமாளிக்க பா.ஜ.க. தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.