புதுடெல்லி (30 ஜன 2020): கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்துள்ள சீனாவில் இருந்து விமானம் மூலம் அதிக பயணிகள் வரும் நாடுகளின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து, கரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சௌதாம்டன் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் இந்த பட்டியலில், கரோனா வைரஸ் பரவும் ஆபத்து நிறைந்த நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 23வது இடத்தில் இந்தியா உள்ளது.
முதல் இடத்தில் தாய்லாந்தும், 2வது இடத்தில் ஜப்பானும், 3வது இடத்தில் ஹாங்காங்கும் உள்ளன. அதிக பயணிகளின் வருகை மட்டுமல்லாமல், கடந்த முறை இந்த நோய் பரவலின் போது, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் நகரங்களையும் இந்த பட்டியல் தயாரிக்க அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.