டெல்லி கலவரம் – தலைவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: சோனியா காந்தி!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து கலவரம் மூண்டுள்ளது.

இந்த வன்முறையில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கலவரத்திற்கு நேரடி பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கலவரத்தின் பின்னணியில் பாஜகவே இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பாஜக தலைவர்கள் பேசியவை இந்த கலவரத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டவை என்றும் சோனியா காந்தி சாடியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *